Sunday, June 2, 2013

நேர்மறை எண்ணம்

நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்:


ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக          அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர் திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். மாறாக, அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில், திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம் உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம் உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.
மேலும், சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகளும் அவருக்கு இருப்பதால் அவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.

"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு சமம்"
என்று ஒரு பொன்மொழி உண்டு.
நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய முடியாது.
"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால் முடிந்ததை செய்"
"உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு. ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"
"ஒரு உண்மை அறிவாளி என்பவர் 1% மட்டுமே உந்துதலைக் கொண்டிருப்பார். ஆனால் 99% கடும் முயற்சியைக் கொண்டிருப்பார்"
போன்றவை பிரபலமாக பொன்மொழிகள்.
* நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது. நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* ஒரு நேர்மறை சிந்தனையாளர், தடைக் கற்களைப் படிக்கற்களாகவே நினைக்கிறார். ஒரு தோல்வியைப் பற்றி சிந்திக்கும்போது, அது எந்தளவு நம்மை காயப்படுத்தியது என்பதைப் பற்றி சிந்திக்காமல், அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்தித்து, அது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், இயற்கையாகவே அந்த எண்ணத்துடன் பிறக்கிறார்களா? அல்லது காலப்போக்கில் அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்களா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனின் குணநலன் என்பது, அவரது வாழ்க்கையின் உருபெறும் காலகட்டத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது, குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து அம்சங்களும் ஒரு மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
"ஒரு இயந்திரம் 50 சராசரி மனிதர்களின் வேலைகளை செய்யும். ஆனால் எந்த ஒரு இயந்திரமும், ஒரு குறிக்கோளுடைய அசாதரண மனிதனின் வேலையை செய்துவிட முடியாது"
இதுவும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழிதான்.
ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட மனிதரை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவரது குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும்? இது மிகவும் எளிது.
* நேர்மறை மனிதர்கள் பணிவானவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், நம்பிக்கை மற்றும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், முயற்சிசெய்ய எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். அந்த மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் இருக்கும். அத்தகைய மனிதர்கள் எல்லாவித சூழல்களிலும் வரவேற்கப்படுவார்கள்.
* அத்தகைய மனிதர் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடுவார். நடந்துவிட்ட துன்பங்களை இறந்த காலமாக கருதி, சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
* ஒரு மனிதர் நேர்மறை எண்ணமுள்ளவராக மாறுவதில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தி அதிகரிக்கும், குழுமுயற்சி ஊக்குவிக்கப்படும், பணி செய்யும் சூழல் மேம்படும், பணியின் தரம் அதிகரிக்கப்படும் மற்றும் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் அத்தகைய எண்ணம் உள்ள மனிதரின் தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும்.
* நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும்கோபம் போன்றவை ஏற்படும். ஒரு எதிர்மறை சிந்தனையாளர் தன்னை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தான் சார்ந்த ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கிறார். அவரது வாழ்க்கையில், அனைத்துவித உறவுகளுமே நிலையற்றதாகவே இருக்கும்.
* எதிர்மறை எண்ணங்கள் இவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்தபோதும், பலர் ஏன் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதில்லை மற்றும் அந்த மாறாத நிலையின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாற்றமானது, நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இத்தகைய மனிதர்கள் முதலில் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
* ஒருவர் மற்றவரின் மனதை வசியம் செய்து மாற்றிவிட முடியாது. ஒவ்வொருவருமே, மனதளவில், மாற்றத்திற்கான கதவை திறக்க முடியாதவாறு வாயிற்காப்போனாக நிற்கிறோம். எனவே ஒருவர் மனதை விவாதம் செய்தோ அல்லது உணர்ச்சி வகையிலோ மாற்றிவிட முடியாது. அந்த முயற்சியானது ஒவ்வொருவரின் உள்மனதிலிருந்து தொடங்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை வேண்டும்




வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த, பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆனால், காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே, எந்த விஷயத்திலும், சாமர்த்தியமாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும். அதற்கான சில ஆலோசனைகளைப் பற்றி இங்கே அலசுவோம்,

நோக்கத்தைப் பற்றி தெளிவான புரிதல்

ஒருவருக்கு தனது இலக்கைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். பலர், தான் எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலேயே, தேவையின்றி கடினமாக உழைத்து, தங்களின் ஆற்றலையும், நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். எனவே, இந்த விரயத்தை தவிர்க்க, நோக்கத்தை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்.

எதற்கு முக்கியத்துவம்?

ஒரு காரியத்தை மேற்கொள்கையில், முதலில் எதை செய்தால் வேலை விரைவாக முடியும் மற்றும் பலன் அதிகமாக கிடைக்கும் என்பதை தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மதுரையிலிருந்து, சென்னைக்கு சாலை வழியாக பயணம் செய்யும் ஒருவர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்தால் விரைவாக வந்து விடலாம். சிறந்த சாலை வசதியும் உண்டு. மாறாக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து, கரூர் சென்று, சேலம் சென்று, விருத்தாச்சலம் வந்து, பிறகு விழுப்புரம் சென்று, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் வழியாக சென்றால் எவ்வளவு தேவையில்லாத ஒன்றோ, அதுபோலத்தான் அம்சங்களை அலசி ஆராயாத உழைப்பும்.

ஒரு இலட்சியத்திற்காக உழைக்கையில், எந்த காரியத்தை முதலில் செய்தால், விரைவாகவும், எளிதாகவும் வேலை முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, கடைசியில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்சத்திற்கு, ஆரம்பத்திலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

குழப்பிக் கொள்ளாதீர்…

உங்களின் லட்சியத்தை அடையும் முயற்சியில், வேலைகளை பிரித்து செய்யும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை, ஒரேநேரத்தில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க வேண்டும். அதைவிடுத்து, பல வேலைகளை ஒரேநேரத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு, குழப்பிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக்கூடாது.

அனைத்தும் தயாராக இருத்தல்

ஒரு வேலையை துவங்கும்போது, அதற்கு தேவையான உதவி உபகரணங்கள் அனைத்தையும் முதலிலேயே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு வேலையானது தொடங்கப்பட்டு விட்டால், விரைவாக சென்று கொண்டே இருக்க வேண்டும். தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருந்தால்தான் தடையின்றி செல்ல முடியும். வேலையின்போது, தேவையானவற்றை அங்குமிங்கும் தேடினால், மனஉளைச்சல் ஏற்படுவதுடன், பல்வேறான தீங்குகள் ஏற்படும்.

சரியான சூழல்

முக்கியமான ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதற்கான புறச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தொந்தரவற்ற, தேவையானால் அமைதியான, நிம்மதியான சூழலை அமைத்துக் கொண்டால், உங்களின் வேலை விரைவாக, வெற்றிகரமாக முடிவதை உறுதி செய்யலாம்.

உதவி கேட்கலாமா?

பொதுவாக, ஒருவர் தனது வேலையை பிறரின் உதவியின்றி, யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தானே செய்து முடிக்க வேண்டும் என்று இயல்பாக நினைப்பார். அது ஒரு நல்ல கொள்கையும்கூட. ஆனால் சில சமயங்களில் பிறரின் உதவியை கேட்டே ஆக வேண்டிய நிலையேற்படும்.

அந்த நேரத்தில், பிடிவாதம், வரட்டு கவுரவம் பார்க்காமல் பிறரிடம் உதவி கேட்பதில் தவறில்லை. இதன்மூலம், உங்களின் லட்சியம் எளிதாக அடையப்படலாம்.

ஒதுக்கி விடவும்…

வாழ்க்கையில் தெளிவான இலக்கின்றி நாம் இருக்கையில், எது முக்கியம், எது முக்கியமற்றது என்பது நமக்குப் புரியாது. எனவே, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செயல்படுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தப் பின்பாக, தேவையற்றதை ஒதுக்குவதற்கு தயங்கக்கூடாது.

மதிப்பாய்வு செய்க…

ஒரு நீண்ட செயல்பாட்டில் நீங்கள் ஈடுபடுகையில், அதன் தொடர் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் அவசியம். எந்த செயல் அதிக பலனைத் தந்தது, எந்த செயல் நேரத்தை வீணடித்தது என்பதை மதிப்பிடுவது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. இதன்மூலம் தேவையற்றதை ஒதுக்கி, நமது பணியை விரைந்து முடிக்கலாம்.

முடிவே முக்கியம்

வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்றில்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவு வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு ஆகும் நேரத்தைவிட, அதனால் கிடைக்கும் நன்மைதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.